சென்னையில் திமுக மா.செ.க்கள் கூட்டம்.. ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ஆலோசனை!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 23-ஆம் கடைசி நாளாகும்.
ஆர்.கே. நகர் தொகுதியில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தேர்தல் பிரசார கூட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.