ஆளுநர் ஆய்வு செய்வதா? நிறுத்த வேண்டும் - திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததை அடுத்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
சென்னை:தமிழகம் முழுவதும் 4-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காண வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஆய்வு செய்வதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக, பாஜக உள்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி இன்று திமுக மாவட்ட செயலாளர்ள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியை அடுத்து மாவட்டச் செயலாளர்களை உத்வேகப்படுத்தும் வகையிலும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2ஜி வழக்கில் இருந்து விடுதலையான ஆ.ராசா, கனிமொழிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஈரோட்டில் மார்ச் மாதம் திமுக மண்டல மாநாடு நடத்துவது,
உள்ளாட்சி வார்டு சீரமைப்பில் குளறுபடிக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு தயாராகுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாகவும், ரஜினி, கமல் அரசியல் கட்சிகளை தொடங்கவுள்ள நிலையில் திமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுகவினர் கட்சி தாவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 65 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.