திமுக - தேமுதிக கூட்டணி பற்றிய செய்தி வதந்தி...சொல்கிறார் கனிமொழி !
சென்னை: திமுக - தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதபோது அந்த செய்தி வதந்தியாகத் தான் இருக்கும் என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
2016-ஆம் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே திமுக - தேமுதிகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரும் அந்த செய்திகளை நம்ப வேண்டாம். கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதத்துக்கு மேல் இருப்பதால் அரசின் குறைகளை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் அளித்த பின்னர் 6 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர். எனவே இங்கிருக்கும் குறைகளை தேர்தல் ஆணையம் நிவர்த்தி செய்யும் என நம்புகிறோம். தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியா? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போது அந்த செய்தி வதந்தியாகத் தான் இருக்கும் என கனிமொழி கூறினார்.