கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி பெயர்களில் விருப்ப மனு... அப்போ 'அண்ணன்' அழகிரி?
சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தில் விருப்பமனு விற்பனை நேற்றுடன் முடிவடைந்து விட்டது. திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, உதயநிதி பெயர்களில் ஏராளமானோர் விருப்பமனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24ம் தேதி தொடங்கி கடைசி நாளான புதன்கிழமை வரை 6000 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள் ளது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கான விருப்ப மனுக்கள் ஜனவரி 24ம் தேதி முதல் கட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 2ம் தேதி வரை சுமார் 1,500 பேர் மட்டுமே விருப்ப மனுக்களை வாங்கி யிருந்தனர்.
அதிலும் சுமார் 500 பேர் மட்டுமே மனுக்களை பூர்த்தி செய்து அளித்திருந்தனர். தேய்பிறை என்பதாலும், முகூர்த்த நாட்கள் இல்லை என்பதாலும் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளிக்க முன்வரவில்லை என கூறப்பட்டது.
முகூர்த்த நாட்களில் மனு
முகூர்த்த நாட்களான கடந்த 3, 5ம் தேதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை அளித்தனர். அதிலும் கடந்த வெள்ளிக்கிழமை அமிர்தயோகம் என்பதால் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டன.
தை அமாவாசை
தை அமாவாசை நாளான பிப்ரவரி 8ம் தேதி ஆயிரக்கணக்கான திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் திரண்டனர். இதனால் மனுக்களை கொடுக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைப் பெறவும் அமைக்கப்பட்ட கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
அமைச்சர்கள், மா.செக்கள்
எ.வ.வேலு, கீதா ஜீவன், தா.மோ.அன்பரசன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், நடிகர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் அமாவாசை நாளில் விருப்ப மனு அளித்தனர். 8ம் தேதி மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிக மானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
கருணாநிதி பெயரில் மனு
முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதிக்காகவும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்காகவும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இவர்கள் இருவரின் பெயரில் மட்டும் 3000 பேர் மனு கொடுத்துள்ளார்களாம்.
திருவாரூர், கொளத்தூர்
கருணாநிதி தற்போது வெற்றி பெற்றுள்ள திருவாரூர், ஸ்டாலின் தற்போது வெற்றி பெற்றுள்ள கொளத்தூர் தொகுதிகளில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
கனிமொழிக்கு மனு
சென்னையில், ராயபுரம், மாதவரம் தொகுதிகளில், கனிமொழி போட்டியிட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி, ஸ்ரீவைகுண்டம் உட்பட, தென் மாவட்டங்களில் உள்ள தொகுதி ஒன்றில், கனிமொழி போட்டியிட வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி பெயரில் மனு
ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட ரசிகர் மன்றங்கள் சார்பாக விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அப்போ அழகிரி
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மீண்டும் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது இப்போதைக்கு நடக்காது என்று உறுதியாக கூறிவிட்டார் ஸ்டாலின். இதனால் அப்செட் ஆன அழகிரி தனது முடிவை இரண்டு மாதத்தில் அறிவிப்பதாக கூறியுள்ளார். இப்போது விருப்பமனு தாக்கல் செய்வதிலும் கருணாநிதி தொடங்கி உதயநிதி வரை விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அழகிரியின் ரியாக்சனை எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
திருச்சியில் மல்லுக்கட்டு
திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிவந்த கே.என். நேருவை சிலகாலமாகவே டம்மியாக்கும் வேலைகளை திமுக தலைமை தொடங்கிவிட்டதாக கருத்து நிலவி வந்ததது. அதனை உண்மையாக்கும் வகையில் ஸ்டாலினால் வளர்க்கப்பட்ட அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாராம்.
மாறி மாறி மனு தாக்கல்
கடந்த 8ம் தேதி அமாவாசை நன்னாளில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏவும் மகேஷின் சித்தப்பாவுமான அன்பில் பெரியசாமி திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்து விட்டு வந்தார். கண்டிப்பாக பெரியசாமிக்குத்தான் இந்த முறையும் கட்சியில் சீட் ஒதுக்குவார்கள் எனக்கருதியிருந்த நிலையில் விருப்பமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அதே தொகுதிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யாருக்கு சீட்டு யாருக்கு வேட்டு இதுதான் இப்பொழுதைய ஹாட் டாக்.
பல கோடி வசூல்
ஜனவரி 24 முதல் நேற்றுவரை சுமார் 6 ஆயிரம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8ம் தேதிவரை விருப்ப மனு விற்பனை மூலமும், தேர்தல் நிதியாகவும் இதுவரை தி.மு.க.வுக்கு ரூ.26 கோடி கிடைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தலைவர் கருணாநிதி. ஆனால் விருப்பமனுக்களின் மூலம் மட்டும் எத்தனை கோடி வசூலாகியுள்ளது என்பதை சொல்லவில்லை. அதிமுகவில் விருப்பமனு மூலம் மட்டுமே 28 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதால், திமுகவில் அதை விட கூடுதலாக வசூலாகியிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.