ரஜினியை திமுகவுக்கு வருமாறு அழைக்க மாட்டோம்.. ஸ்டாலின்
ரஜினிகாந்த்தை திமுகவில் சேருமாறு அழைக்கவில்லை, அழைக்கப்போவதும் இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கால் ஊன்ற திட்டமிடுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகள் கடந்த 3 மாதங்களாக அதிலும் குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அனலாக பரவி வருகிறது என்றே சொல்லலாம். கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு அதிமுக பிளவு பட்டு எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தமிழகத்தில் தனது கட்சியை காலூன்றும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ரஜினிகாந்த் பாஜகவின் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்படலாம் என்றும், ஒரு வேளை தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் அதில் பாஜக முதல்வர் வேட்பாளராகவும் ரஜினி அறிவிக்கப்படுவார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்த அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ரஜினி ரசிர்களை சந்திக்கும் நிகழ்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
எரிகிற கொள்ளியில் எண்ணெய்
தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாவட்ட வாரியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், முதல் நாளிலேயே தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்று எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றினார்.
பாஜக, அதிமுக தலைகள் இல்லை
இன்றைய கடைசி நாள் கூட்டத்தில் பேசிய ரஜினி தனது வயது ஒத்த அரசியல் தலைவர்களான ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரை புகழ்ந்து பேசினார். ஆனால் அதிமுக, பாஜகவைச் சேர்ந்த அரசியல் தலைகளை மட்டும் அவர் ஏன் குறிப்பிட மறந்தார் என்பது மற்றொரு கேள்வியை எழுப்புகிறது. ஒருவேளை இது எதிர்க்கட்சிகளை கூல்டவுன் செய்யும் வேலையா என்றும் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் சொன்ன 'மகிழ்ச்சி'
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாகக் கூறுவது குறித்து மகிழ்ச்சி என்று அவரது ஸ்டைலிலேயே பதிலளித்துள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இது குறித்து பதிலளித்துள்ள அவர், "ரஜினி திமுகவிற்கு வர விரும்பினால் வரவேற்கிறேன். ரஜினி சுயமாக முடிவெடுப்பவர், யாருடைய வற்புறுத்தல்களுக்கும் மயங்காதவர். எனவே திமுக அவரை கட்சியில் சேர வேண்டும் என்று அழைக்கவில்லை, அழைக்கப்போவதும் இல்லை" என்றார்.
ஊழ்ல் எப்போது வந்தது
ரஜினி தன்னை சிறந்த நிர்வாகி எனக் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு கருவியாக ரஜினியை பயன்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இது எப்போதும் நடக்காது என்றும், கடந்த 6 ஆண்டுகளாகத் தான் தமிழக அரசியலில் ரஜினி சொல்வது போல ஊழல் தலைவிரித்தாடுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.