ஆட்டம் காணும் ஆர்.எஸ்.பாரதியின் அமைப்புச் செயலாளர் பதவி... குவியும் புகார்கள்
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அண்மைக்காலமாக புகார்கள் குவிந்து வருவதால் அது பற்றி முதல்முறையாக விசாரித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
திமுகவில் அசைக்கமுடியாத சக்தியாக திகழும் ஆர்.எஸ்.பாரதி அந்தக் கட்சிக்காக பல வழக்குகளை திறம்பட நடத்தி வெற்றி கண்டவர். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தவர். மறைந்த கருணாநிதி வெட்டி வா என்றால் கட்டிவரக் கூடியவர். இதனால் இவருக்கு கட்சியில் செல்வாக்கு கிடு கிடுவென உயர்ந்தது. சாதாரண நகர்மன்ற தலைவராக இருந்த இவர் இன்று ராஜ்யசபா உறுப்பினர், திமுக அமைப்புச் செயலாளர், கட்சி பிரச்சனைகளை பஞ்சாயத்து செய்பவர் என பல பரிணாமங்கள் பெற்றுள்ளார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு கூட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், முதல்வரின் உறவினர்கள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ஆளுங்கட்சி தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தார். குறிப்பாக முதல்வரின் உறவினர்கள் மேற்கொள்ளும் அவினாசி-ஒட்டனசத்திரம் சாலைப்பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு உள்ளதாக கூறி பரபரப்பை பற்ற வைத்தார். இப்படி ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக துணிச்சலாக செயல்படுவதால் ஆர்.எஸ்.பாரதி மீது ஸ்டாலினுக்கு எப்போதுமே நன் மதிப்பு உண்டு.
இதனால் மாவட்டங்களில் நடக்கும் உட்கட்சி மோதல், தேர்தல் பணியாற்றாத விவகாரம் உள்ளிட்டவைகள் பற்றியெல்லாம் விசாரிக்குமாறு ஆர்.எஸ்.பாரதிக்கு முழு அதிகாரம் அளித்தார் ஸ்டாலின். இதனிடையே அவர் பஞ்சாயத்து செய்வது சரியில்லை என்றும், தனக்கு அறிமுகம் இருந்தால் ஒரு மாதிரியும், அறிமுகம் இல்லாத நிர்வாகிகளிடம் ஒரு மாதிரியும் அவர் நடந்துகொள்கிறார் என ஏராளமான புகார்கள் ஸ்டாலினுக்கு கிடைத்தன. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தொலைக்காட்சி ஊடகம் குறித்தும் அதில் பணியாற்றுபவர்களை தரம் தாழ்ந்தும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை அளித்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஏன் இப்படியெல்லாம் பேசி கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள், உங்களிடம் இருந்து இதுபோன்ற பேச்சை எதிர்பார்க்கவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். மேலும், ஏற்கனவே அவர் மீது கட்சிக்காரர்கள் கூறிய புகார்கள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டதாம். மேலும், ஆர்.எஸ்.பாரதி கொடுத்த விளக்கமும் ஸ்டாலின் தரப்பில் ஏற்கப்படவில்லையாம். இதையடுத்து தான் பதறித்துடித்து செய்தியாளர்களை சந்தித்து ஆர்.எஸ். பாரதி மன்னிப்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே இது தான் தருணம் என கருதி ஆர்.எஸ்.பாரதியிடம் உள்ள அமைப்புச் செயலாளர் பதவியை கைப்பற்ற 2 சீனியர்கள் முட்டி மோத தொடங்கியுள்ளனர்.