அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கு குறிவைக்கும் டெல்லி.. 2ஜி தீர்ப்புக்கு பின் 'அதகளம்' ஆரம்பம்!
திமுகவுக்கும் டெல்லி குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திமுகவினர் மீது ரெய்டுகள் ஏவிவிடப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கும் டெல்லி குறிவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் 2ஜி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து திமுகவினர் மீது ரெய்டுகள் ஏவிவிடப்படலாம் என தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டெல்லி போடும் ஆட்டம் தமிழகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிறது. எதையும் சாதித்துவிடலாம் என நினைத்துக் கொண்டு தமிழகத்தில் வேட்டையாடி வருகிறது டெல்லி.
தமிழக அரசின் தலைமை செயலகத்தையும் கூட விட்டு வைக்கவில்லை டெல்லி அதிகாரிகள். அத்துடன் அண்ணா திமுக என்ற மாபெரும் கட்சியை பல துண்டுகளாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டனர்.
அடக்கி வாசித்த திமுக
டெல்லியின் இந்த விஸ்வரூபத்தால் திமுகவும் நடுநடுங்கித்தான் போயுள்ளது. இதனால்தான் திமுக டெல்லியை எதிர்க்காமல் சற்றே அடக்கி வாசித்தது.
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு
இப்போது டெல்லிக்கு எதிராக உக்கிரத்தை திமுக காட்டி வருகிறது. இதனிடையே இன்னும் 2 மாதங்களில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு வர உள்ளது.
அடுத்து அதகளம்தான்...
இந்த தீர்ப்புக்குப் பின்னர் டெல்லியின் 'வேட்டை'களமாக திமுகதான் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக திமுகவின் மும்மூர்த்திகளாக இருக்கும் தலைமைக்கு நெருக்கமான மூவரணிதான் டெல்லியின் இலக்கு என்று சொல்லப்படுகிறது.
அவமானப்படுத்துவதுதான் நோக்கம்
திமுக தலைமையின் வெளிநாடு முதலீடுகளை சந்திக்கு கொண்டு வந்து அவமானப்படுத்திவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது டெல்லி. இதை உணர்ந்து ஜனவரி மாதம் மூவரணி லண்டன் போன விவகாரம் தொடர்பாக புதிய தகவல்களை கசியவிட இருக்கிறதாம் டெல்லி.