தலைமையிடம் போராடி தஞ்சையைக் கைப்பற்றிய திமுகவின் டி.ஆர்.பாலு
தஞ்சாவூர்: தஞ்சை லோக்சபா தொகுதியில் முதல் முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
டி.ஆ. பாலு தஞ்சாவூர் மாவட்டம் தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராசு. இவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கட்சிக்கு பணியாற்றி வருகிறார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மகன் டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.
முதுபெரும் தலைவர்களிடம்
டி.ஆர் பாலு கடந்த 1957ம் ஆண்டு முதலே தி.மு.க.வில் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 1974ம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் தி.மு.க. துணைச் செயலாளராகவும், பின்னர் 1976ம் ஆண்டு மிசா கைதியாக 1 வருடம் சிறைவாசம் அனுபவித்தார்.
பெரியார், அண்ணா, ஆகிய முதுபெரும் தலைவர்கள் காலத்தில் இருந்தே அரசியலில் பணியாற்றியவர். திமுக தலைவர் கருணாநிதியின் நன் மதிப்பை பெற்றவர் டி.ஆர்.பாலு ஆவார்.
மாவட்ட செயலாளர்
கடந்த 1982ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்து உள்ளார். இவர் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த போது 14 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிப் பெற்றது. இதனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் பெரிதும் பாராட்டப்பட்டார்.
லோக்சபா அனுபவம்
1986ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தொடர்ந்து 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவிகள்
கடந்த 1996 முதல் 2009 வரை தொடர்ந்து 13 வருடம் மத்திய அமைச்சராக இருந்து உள்ளார். கடந்த 1996ம் ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சராகவும், பின்னர் மத்திய சுற்றுச் சூழல் துறை மற்றும் மத்திய வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்து உள்ளார். இவர் வருகிற லோக்சபா தேர்தலில் தஞ்சை தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
தஞ்சையைக் கைப்பற்ற பல்வேறு லாபிகள் செயல்பட்ட நிலையில் திமுக தலைமையிடம் போராடி இந்த தொகுதியை கைப்பற்றினாராம் டி.ஆர். பாலு.