ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு.. உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தாக்கல்.
டெல்லி : ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி தனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை கடந்த 6 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
மேல்முறையீட்டு மனுவில் 9 குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியது. இந்த குறைபாடுகள் குறித்த தகவல்கள் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலக இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவில் உரிய திருத்தங்களை செய்து மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த சிறப்பு அனுமதி மனுவுக்கு உரிய பதிவு எண் வழங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.