மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஹைகோர்ட்டில் திமுக மனு
உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலதாமதம் செய்யும் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலதாமதம் செய்யும் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளி யிட்டு இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை விதித்தது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 30க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.
தேர்தலை நடத்த காலக்கெடு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட்டி ராம்மோகன் ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ‘‘வரும் மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என காலக்கெடு விதித்தனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் புதிய பிரதிநிதிகள் பதவியேற்க வேண்டும் என பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் உள்ளது. அதன்படி, ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி பிரதிநிதிகள் பொறுப்பேற்க வேண்டும் என மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பாடம் ஏ.நாராயணன், தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாகவும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது.
மாநில தேர்தல் ஆணையம் அவகாசம்
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், வாக்காளர்பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம். எனவே, தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.
உயர்நீதிமன்றம் மறுப்பு
தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் மீண்டும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது கேலிக் கூத்தாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகவும் உள்ளது. மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துக்கொண்டே இருக்க முடியாது. ஏற்கெனவே மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எச்சரிக்கை
அதன்படி, தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும், மே 14க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த முதன்மை அமர்வு, வேண்டுமென்றால் மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டியதுதானே எனக்கூறி வழக்கை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
திமுக வழக்கு
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் இன்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக முறையீடு செய்தார். வழக்கு தொடர நீதிபதிகள் சுப்பிரமணியம் நூட்டி ரமமோகன் ராவ் அமர்வு அனுமதி அளித்துள்ளார். அனுமதியை அடுத்து ஆர்.எஸ் பாரதி தரப்பு வக்கீல் வில்சன் மனு தாக்கல் செய்தார்.