கொறடா உத்தரவை மீறுவாங்களாம்- அமைச்சராகவும் பதவியேற்பாங்களாம்..அதெப்படி செல்லும்? திமுக திடீர் வழக்கு
கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செயல்பட்டதாக 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து 18 பேரும் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி 12 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். கொறடாவுக்கு தெரியாமல் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த 18 பேரை தகுதிநீக்கம் செய்த நிலையில் அதே கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும்? கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த இருவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பிய பிச்சாண்டி, ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் விளக்கம் அளிக்கவும் கோரியுள்ளார்.