உச்சகட்ட பரபரப்பு.. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
Recommended Video
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் முதலில் புதுச்சேரியிலும், பிறகு கர்நாடக மாநிலம் குடகிலுள்ள ரிசார்ட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இல்லாமல் செயல்பட்டுவருவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.
2 முறை மனு
திமுக சார்பில் ஏற்கனவே 2 முறை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் திமுக கோரிக்கை முன் வைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் ஆளுநரை சந்தித்து இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்தன.
திமுக வழக்கு
ஆனாலும், ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினகரன் கோபம்
எடப்பாடி பழனிச்சாமி அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தினகரன் மேலும் கோபமடைந்துள்ளார்.
நெருக்கடி
தினகரன் இன்று அளித்த பேட்டியிலும், ஆட்சியை கலைக்க தயாராகிவிட்டதாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடுமாறு ஹைகோர்ட்டை திமுக அணுகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கலைந்தால் தேர்தலை சந்திக்க திமுக தயாராகிவருகிறது என்பது இந்த நடவடிக்கை மூலம் தெளிவாகிறது. அதற்கான நெருக்கடிகளை திமுக சட்டரீதியாக கொடுக்க ஆரம்பித்துள்ளது.