அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு.. ஜெயலலிதா பதவி விலகி இருக்க வேண்டும்: மு.க ஸ்டாலின் பேச்ச
மதுரை: அவதூறு வழக்குகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முதல்வர் ஜெயலலிதா கண்டித்து உள்ளது. இதற்கு அவர் இந்த நேரம் பதவி விலகி இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாருமான மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
"சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் மதுரையில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் என சட்டசபையின் அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக பங்கேற்றுள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு நீதிமன்றம் என பெயர்மாற்றம் செய்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் ஆதரவு அளித்து பாராட்டினோம்.
செம்மொழி மாநாடு பற்றி விவாதம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு அதிமுகவினர் விமர்சனம் செய்கின்றனர். அப்போது குறிப்பிட்ட வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரினால், பேரவைத் தலைவர் தனபால் அதற்கு மறுப்பு தெரிவித்து, திமுகவினர் தான் பிரச்னையை உருவாக்குவதைப் போல பேசி பதிவு செய்வது சரியல்ல.
அமைச்சர்களும், அதிமுக உறுப்பினர்களும் திட்டமிட்டு திமுகவினரை கோபப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். 89 ஏம்எல்ஏ-க்களை கொண்ட தி.மு.க. சட்டசபையில் பேசினால், ஆளும் கட்சியினரால் பதில் அளிக்க முடியவில்லை. அவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடுமோ என்ற அச்சத்தில் தான் எங்களை நீக்கம் செய்து விட்டார்கள். தி.மு.க. மீதும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வேண்டும் என்றே சபாநாயகர் களங்கம் ஏற்படுத்துகிறார்.
எங்களை பேச விடாமல் செய்வதற்காக சதி செய்து எங்களை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து விட்டார் சபாநாயகர். எதிர்க்கட்சிக்கு குறைந்த உறுப்பினர்கள் இருந்தால் கூட சட்டசபையில் அவர்களின் கருத்துகளை பதிவு செய்வது சபாநாயகரின் கடமை. ஆனால் தற்போதைய சபாநாயகர் அவ்வாறு செயல்படாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மட்டும் செயல்படுகிறார். இந்திய சட்டசபை வரலாற்றில், ஒரு தலைப்பட்சமாக செயல்படும் சபாநாயகர் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர் தான்.
மக்களை பற்றி எந்த அக்கறையும் இல்லாத அ.தி.மு.க.விற்கு அவர்களைப் பற்றி கருத்து கூறும் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் அவதூறு வழக்குகள் போடுவதிலேயே குறியாக உள்ளனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்துள்ளனர். பிற கட்சிகள் கூறும் கருத்துகளை சகித்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஜெயலலிதாவை கண்டித்து உள்ளது. இதற்கு அவர் இந்த நேரம் பதவி விலகி இருக்க வேண்டும்.
சட்டசபையில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது என்பது ஜனநாயக மரபு. முதல்வர், அமைச்சர் கருத்தில் எதிர்க்கட்சிக்கு உடன்பாடு இல்லாவிட்டால் வெளியே சென்று பத்திரிகைகளிடம் கருத்து தெரிவிக்கலாம். எனவே மக்கள் மன்றத்திலிருந்து திமுகவை நீக்க முடியாது.
இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்களுக்காகப் போராடிய திமுக தலைவர் கருணாநிதியை, சட்டசபைக்கு வர முடியுமா என முதல்வர் ஜெயலிதா சவால் விடுவது சரியல்ல என்று கூறினார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வேண்டும் என்றும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அழைத்து பிரதமரை முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று சட்டசபையில் பேசினோம்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதா அது தொடர்பாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. பிரதமருக்குக் கடிதம் மட்டுமே எழுதியுள்ளார் ஜெயலலிதா. கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறினார்.