திமுக பொதுக்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக வரும் 19ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் அதிகாரம் கொண்ட பொதுக்குழுவை ஆண்டுக்கு இருமுறையாவது, கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது. இவ்வாண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கட்சி தலைவர் கருணாநிதி உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒத்திப்போடப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
இதனிடையே, இம்மாதம், 19ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டிற்கு இரு முறையாவது பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிகளில் ஒன்று என்பதால், இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் திமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அண்ணா அறிவாலயம் இல்லை
வரும் 19ம் தேதி திமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வந்த பொதுக்குழு கூட்டம் இம்முறைதான் இங்கு மாற்றப்பட்டது.
கருணாநிதி உடல்நிலை
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 19ம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இதே ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுசெயலாளர் நியமனம் ரத்து உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.