அதிமுகவை வீழ்த்த மும்மூர்த்திகள் வியூகம்.. தூத்துக்குடி மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த திமுக!
சென்னை: மதிமுகவில் இருந்து பிரிந்த ஜோயல் திமுகவில் சேர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் பலமிக்கதாக மாறியுள்ள திமுகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
தென் மாவட்டங்களில் அதிமுக பலமான கட்சி என்ற ஒரு பேச்சு எம்ஜிஆர் காலம் தொட்டே நிலவிவருகிறது. அதற்கேற்ப தென் மாவட்டங்களில் அதிமுக கணிசமான வெற்றிகளை சுவைத்து வந்துள்ளது.
தேவர் ஜாதியினரில் பெரும்பாலானோர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிமுகவுக்கு பலம் எனில், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் பரவலாக உள்ள பரதவர் இனத்தவர்கள் வாக்குகள் கொத்தாக கிடைப்பது மற்றொரு முக்கிய பலம்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டபிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பெரியசாமி கோட்டை
இதில் தூத்துக்குடி சட்டசபை தொகுதி அதிக வாக்காளர்களை கொண்டது. மொத்தம் 267119 வாக்காளர்கள் உள்ளனர். திமுகவின் முரட்டு பக்தர் என்.பெரியசாமியின் கோட்டை தூத்துக்குடி தொகுதி என வர்ணிக்கப்படுகிறது.
முக்கியமான திருச்செந்தூர்
அதேபோல ஓட்டபிடாரம், விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளிலும் பெரியசாமி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சற்று தென் மேற்காக இந்த பக்கம் வந்தால் திருச்செந்தூர் தொகுதி. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
திருச்செந்தூரில் ஜெயிச்சாதான் கோட்டை
திருச்செந்தூர் தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் ஜெயிக்கிறாரோ, அவர் சார்ந்த அல்லது அவர் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் சென்னையில் கோட்டையை பிடிக்க முடியும் என்பது கடந்த பல தேர்தல்களில் கண்கூடாக பார்க்கப்பட்டுவருகிறது. இதில் அனிதாவின் கடந்த தேர்தல் வெற்றி மட்டுமே விதிவிலக்கு.
செல்வாக்கு மிக்க அனிதா
திருச்செந்தூர் தொகுதியின் செல்வாக்குமிக்க எம்.எல்.ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அதிமுகவில் இருந்து திமுக வந்த அனிதாவுக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. குறிப்பாக, அவர் சார்ந்த நாடார் இன வாக்குகளை பெருமளவுக்கு அறுவடை செய்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.
ஜாதி பலம்
கடந்த அதிமுக ஆட்சியில், வெங்கடேச பண்ணையார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பண்ணையாரின் கோட்டை என வர்ணிக்கப்படும் திருச்செந்தூர் பகுதியிலுள்ள பெரும்பாலான நாடார்கள் அதிமுகவுக்கு எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக பக்கம் சென்றிருந்தால் ஜாதி ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு இருந்தது.
ஜெயலலிதா அலட்சியம்
அனிதா ராதாகிருஷ்ணன் விரும்பியும், அவரை சந்திக்க ஜெயலலிதா நேரம் கொடுக்காமல் புறக்கணித்தார். எனவே சமீபத்தில் கருணாநிதியை சந்தித்த அனிதாராதாகிருஷ்ணன், முழு வீச்சில் கட்சி பணியாற்றுவதாக உறுதியளித்துவிட்டு வந்துள்ளார். அனிதா திமுகவிலேயே தொடருவது திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் திமுகவுக்கு கணிசமான வாக்குகளை ஈட்டித்தரும்.
ஜோயல் வருகை
இதுபோதாது என்று, மதிமுகவின் ஜோயல் சமீபத்தில் திமுகவில் சேர்ந்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் குளத்தை தூர்வரச் செய்ததில் இவரது பங்குமிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வைகோவுக்கு இணையாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெயர் பெற்றவர் ஜோயல். இது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக வாக்கு அறுவடை செய்ய உதவும்.
மும்மூர்த்திகள்
பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ஜோயல் ஆகிய மும்மூர்த்திகளுக்குமே உள்ள தனிப்பட்ட செல்வாக்கு பாதி வாக்குகளை ஈட்டுமெனில், மூவரும் சார்ந்த திமுக ஓட்டுகள் பாதி கிடைக்கும். இந்த கலவை திமுகவுக்கு பெரிதும் பலன் தரும் வாய்ப்புள்ளது.
திமுக கோட்டை?
மேலும், அனிதா ராதாகிருஷ்ணன், ஜோயல் இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்து திமுக வந்தவர்கள். அந்த கட்சிகளின் வாக்கு வங்கியும் திமுக பக்கம் சரியும். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தூத்துக்குடி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
பனிப்போர் நீங்குமா?
பெரியசாமி மற்றும் அனிதா ராதாகிகிருஷ்ணன் நடுவேயான பனிப்போர் மட்டுமே இதில் சிக்கல் விளைவிக்கும். ஆனால், அனிதா தற்போது முழுக்க திமுகவாசியாகிவிட்டதால், திருச்செந்தூர் தொகுதியில் முழுக்கவனமும் செலுத்துவார் என அவரின் ஆதரவாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.