ஜெ. மரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி.. விசாரணை ஆணையத்தில் திமுக மனு!
ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக திமுக விசாரணை ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக திமுக விசாரணை ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள நீதிபதி ஆறுமுகசாமி நவம்பர் 22ஆம் தேதிக்குள் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை கமிஷனில் தகவல் அளிக்கலாம் என தெரிவித்தார்.
ஜெ.மரணம் - திமுக மனு
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் மனு அளித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணம் இந்த மனுவை அளித்துள்ளார்.
மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி
அதில் அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பிற்கும் மருத்துவ அறிக்கைக்கும் அதிக முரண்பாடு உள்ளது என அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு கைரேகைகள்
அதாவது ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் மருத்துவர் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை என சரவணன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் 4 தொகுதி தேர்தலுக்கு 20 கைரேகைகள் மட்டுமே பெறவேண்டும் ஆனால் ஜெயலலிதாவிடம் 28 கைரேகைகள் பெறப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடுபிடித்தது ஜெ.மரண விவகாரம்
விசாரணை ஆணையத்தில் வேறு மாநில மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திமுக ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் அக்கட்சி மனு அளித்திருப்பதால் ஜெயலலிதா மரண விவகாரம் சூடுபிடித்துள்ளது.