நிலப் பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து செய்தார்... சைதை துரைசாமி மீது திமுக புகார்
சென்னை: ஒரு நிலப் பிரச்சினை தொடர்பாக கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மீது உள்துறை செயலாளரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி உள்ளார். சென்னை மாநகராட்சியின் முதல் அதிமுக மேயர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர். மேலும் தனக்கென்று தனியாக நல்ல பெயருடன் இருந்து வந்தவர் சைதை துரைசாமி.
அதிமுகவினர் மட்டுமல்லாமல் மற்றவர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்பட்டவரும் கூட. ஆனால் அவர் மீது தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த வாரம் சைதை துரைசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சைதை துரைசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவரிடம் கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே, கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஜெயா டிவியிலும் சைதை துரைசாமி குறித்த செய்திகள் இடம் பெறவில்லை. இதனால் சைதையார் மீதான புகார் உண்மைதான் போலும் என்ற எண்ணம் எழு்துள்ளது.
இந்த நிலையில், இன்று உள்துறை செயலாளர் அபூர்வா வர்மாவிடம் திமுக கவுன்சிலர்கள் 24 பேர் சேர்ந்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், நிலப் பிரச்சினை தொடர்பாக சைதை துரைசாமி கட்டப் பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப் பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக சைதை துரைசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் சைதை துரைசாமிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டுக்குப் போகவும் திமுக தரப்பு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.