திமுக தலைமை வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவேன் - மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைமை வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவேன் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் பெரியார் நகரில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பொங்கல் பை மற்றும் கரும்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி பின்னர் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதால் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவீர்களா?
பதில்: தி.மு.க. தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்தால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்.
கேள்வி: தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? அதில் என்ன அம்சங்கள் இடம் பெறும்?
பதில்: தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் தயாரித்து முடிக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 2-ந்தேதி வரும் சூழலில் அதை விசாரிக்கும் நீதிபதி மாற்றப்பட்டு இருக்கிறாரே?
பதில்: இதை சட்ட வல்லுனர்களிடம் தான் கேட்க வேண்டும். இந்த வழக்கை கர்நாடக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மற்றபடி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.