பஸ் கட்டண உயர்வை கண்டித்து.. பிப்.13ல் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி கண்டன கூட்டம்!
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பிப்ரவரி 13ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பிப்ரவரி 13ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் யார் யார் எங்கெங்கு பங்கேற்கிறார்கள் என்பது பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசின் அதிரடி பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் ஜனவரி 29ம் தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டங்களை நடத்தினர். இதன் அடுத்தகட்டமாக கட்டணத்தை குறைக்க போராட்டத்தைத் தொடர்வது குறித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டம்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13ம் தேதி கண்டன கூட்டங்கள் நடைபெறுகின்றன. அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று கண்டன கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். யார் யார் எங்கெங்கு பங்கேற்கிறார்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி சிறையில் இருக்கும் பொதுமக்கள், மாணவர்களை விடுதலை செய்வதோடு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
3 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மூன்றாவது தீர்மானமான உயர்நீதிமன்றம் உருவாக்கிட எண்ணிய சகஜ நிலைமைக்கு திட்டமிட்டு குந்தகம் ஏற்படுத்தும் நிலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்த 3 தீர்மானங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் முக்கியத்துவம் பற்றிய விஷயம் தான் அதிக அளவில் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தின் மற்ற பிரச்னைகள் குறித்து அந்தந்த காலகட்டத்தில் அனைத்துக் கட்சியினர் கூடி காலத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் கூட்டணியாக மாறுமா?
தமிழக பிரச்னைகளுக்காக ஓரணியின் திரண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக மாறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் வருகிற போது அதற்கான விடை கிடைக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.