தி.மு.க. மா.செ.தேர்தல்:நேரு, எம்.ஆர்.கே. ஆதரவாளர்கள், சுரேஷ்ராஜன் வெற்றி! திருச்சி செல்வராஜ் தோல்வி!
சென்னை: சென்னையில் திமுகவின் செயலாளர்களுக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் வெற்றி பெற்றுள்ளார்.
புதிய பார்முலா
மாவட்ட செயலாளர் பதவிக்கு கடந்த 11-ந் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக பல முறை மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களே மீண்டும் மீண்டும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டு சட்டசபை, லோக்சபா தேர்தலில் எம்.எல்.ஏ, எம்.பி.களாகி அமைச்சர்களாக வரும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க திமுக மேலிடம் ஒரு புதிய பார்முலாவை கொண்டு வந்தது.
உறுதி மொழி பத்திரம்
மாவட்ட செயலாளர் பதவியில் போட்டியிடுகிறவர், சட்டசபை, லோக்சபா தேர்தலிலோ இதர கட்சிப் பதவிகளிலோ தமக்கோ தமது குடும்பத்தினருக்கோ வாய்ப்பு கேட்க மாட்டோம் என்று உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று திமுக தலைமை நிபந்தனை விதித்தது. இதனை ஏற்று முந்தைய 36 மாவட்டங்களின் 18 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.
வரலாற்றில் முதல் முறையாக
அத்துடன் திமுக வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட செயலாளர் பதவிக்கான வாக்குப் பதிவு சென்னையிலேயே நடைபெறும் என்றும் திமுக தலைமை அறிவித்தது. இதற்கு முன்னரெல்லாம் அடிதடி அரிவாள் வெட்டு நிகழ்ந்த மாவட்டங்களுக்கு மட்டும் சென்னையில் தேர்தல் நடத்துவது வழக்கம்.
இன்று தேர்தல்
இன்று சென்னையில் தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி வடக்கு, கடலூர் மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு, நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக் கோட்டை தெற்கு, மதுரை தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அண்ணா அறிவாலயம் மற்றும் ராயபுரம் அறிவகம் ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
வென்றது யார்? யார்?
கன்னியாகுமரி கிழக்கில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து 30 வயது செந்தில்முருகன் போட்டியிட்டிருந்தார். கடலூர் மேற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. கணேசன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சபா.ராஜேந்திரன் தோல்வி அடைந்தார். திருச்சி வடக்கில் கே.என்.நேரு ஆதரவாளர் காடுவெட்டி என். தியாகராஜன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தோல்வி அடைந்தார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக துரை சந்திரசேகர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம் சகோதரர் ராஜ்குமாரை தோல்வியைத் தழுவினார். இருவரிடையே கடும் போட்டி இருந்தது.
நேரு, எம்.ஆர்.கே
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டியிட்ட கடலூர் கிழக்கு, நேரு போட்டியிட்ட திருச்சி தெற்கு ஆகியவற்றில் யாரும் எதிர்த்து வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அதனால் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இருவரும் அன்னபோஸ்ட்டாக வெற்றி பெற்றதை திமுக மேலிடம் அறிவிக்கும்.
நாளை மறுநாள்..
21-ந் தேதியன்று திருவாரூர், கரூர், தேனி, தர்மபுரி, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.
22-ந் தேதியன்று
22-ந் தேதியன்று திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி (மத்திய) ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.