நீட்டில் இருந்து விலக்கு தராத மத்திய அரசுக்கு கண்டனம்- அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
நீட்டில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: தமிழகத்துக்கு நீட்டில் இருந்து விலக்கு தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை குழு தலைவர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி செயலர் ஜி. ராமகிருஷ்ணன்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை வரவேற்பதாக அரியலூர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார். இக்கூட்டத்தில், நீட்டில் இருந்து விலக்கு தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்ற வலியுறுத்தியும் அனிதாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.