சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு: கருணாநிதி தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம்
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் வரும் 31ஆம் தேதி கருணாநிதி தலைமையிலும், ஆகஸ்டு 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் கண்டன கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 3 முறை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டிருப்பதால் இனி இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாது என்று சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
திமுகவினருக்கு அவமதிப்பு
சட்டப்பேரவையில் சபையில் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து தி.மு.க. உறுப்பினர்கள் ஒத்தி வைப்புத்தீர்மானம், கவன ஈர்ப்புத்தீர்மானம், சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் ஆகியவற்றை விவாதிப்பதற்கு அனுமதி கோரிய நேரத்தில் அவற்றைப் புறக்கணித்தும், குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களின் குறைபாடுகளைப் பற்றிப் பேசுவதற்கே வாய்ப்பு தராமல், எதிர்க்கட்சித் தலைவர்களை, குறிப்பாக கட்சித்தலைவர் கருணாநிதியை, அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சனம் செய்வதையே தங்களின் பணியாகக் கொண்டுள்ளனர்.
மூன்றுமுறை வெளியேற்றம்
அவர்களின் பேச்சுக்கு முதல்வரோ, சபாநாயகரோ தடை செய்யாமல் அவர்களை அவ்வாறு பேச ஊக்குவிப்பதோடு, தி.மு.க. உறுப்பினர்களை அவர்களுக்குப் பதில் கூற முனைந்தால் அதற்கு வாய்ப்பு தரப்படுவதும் இல்லை. சபை நடைபெற்ற ஒன்பது நாட்களில் தி.மு.க. உறுப்பினர்களை மூன்று முறை வெளியேற்றியிருக்கிறார்கள், என்பதிலிருந்து எந்த அளவுக்கு தமிழ்நாடு சட்டசபை நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சஸ்பெண்ட் உத்தரவு
தற்போது மூன்று முறை வெளியேற்றிய காரணத்தால் இந்தக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் பேரவை விவாதங்களில் கலந்து கொள்ளக்கூடாதென சட்டப்பேரவையில் செவ்வாய்கிழமை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஜனநாயகம் படும் பாடு
இத்தகைய போக்கினைக் கண்டிக்கின்ற வகையில் தி.மு.க. சார்பாக ‘‘தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு'' என்ற தலைப்பில் கண்டன கூட்டங்களை மாவட்டத் தலைநகரங்களிலும், மற்றும் முக்கிய நகரங்களிலும் நடத்துவதென்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிப்பதோடு, சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 31-ந் தேதியன்றும், மற்ற நகரங்களில் ஆகஸ்டு 1, 2 ஆகிய தேதிகளிலும் இந்தக் கண்டனக் கூட்டங்களை நடத்துவதென்று என்று திமுக தீர்மானித்துள்ளது.