சட்டசபையில் திமுகவினர் அமளி... சர்வாதிகாரி சபாநாயகர் என முழக்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டத்தின் போது சபாநாயகருக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டதால் அமளியும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏ முத்தையா பேசும் போது, வயல்காட்டு பொம்மைகள் 89. அதற்கு கொக்கு, குருவிகள் வேண்டுமானால் பயப்படும். ஆனால் சிங்கம் பயப்படாது என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் வலியுறுத்தினர். அமளி துமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ முத்தையா கூறிய வயக்காட்டு பொம்மைகள் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் இன்று அவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அந்த கறுப்பு பேட்ஜில், ''எதிர்க்கட்சி உறுப்பினர்களை வயல்காட்டு பொம்மைகள் என்று ஏசிய ஆளுங்கட்சிக்கு கண்டனம்'' என்று அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இன்று கேள்வி நேரம் தொடங்கிய உடன், நேற்று அவையில் நடந்த விவகாரம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பேசினார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது அவை மரபுக்கு எதிரானது. அதனால் சந்திரசேகரின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
அப்படி நீக்காவிட்டால் நேற்றைய நிலையே இன்றும் திரும்பும். நேற்றைய பிரச்னையை எழுப்பும் நோக்கத்துடன் அவைக்கு வரவில்லை. ஆக்கப்பூர்வமான முறையில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவே அவைக்கு வந்தோம். நேற்றைய விவகாரத்தை கண்டித்தே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம் என்று கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், சந்திரசேகர் எதிர்க்கட்சியினரை விமர்சித்து பேசவில்லை. நேற்றைய நிகழ்வை குறிப்பிடவே பேசினார். அதனால் அவரை பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
இதனை எதிர்த்தும், சந்திரசேகர் பேச்சை அவைகுறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சர்வாதிகாரி சபாநாயகர் என முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை அமளி துமளி ஏற்பட்டது.