2019இல் லோக்சபா தேர்தல்... பாஜகவை முறியடிக்க திமுக+ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வியூகம்
2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை முறியடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஓரணியாக திரள உள்ளன.
சென்னை: சென்னையில் திமுக நடத்தும் பிரம்மாண்ட மாநாட்டில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திமுக வியூகம் வகுத்துள்ளது. அதன்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைந்து லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களை பெறுவதோடு பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கங்கணம் கட்டி கொண்டுள்ளன.
மறுபுறமோ பாஜக, காங்கிரஸ் அல்லாத 3 ஆவது அணிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணுகினார். அதைத் தொடர்ந்து சென்னையில் கருணாநிதியையும் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.
காங்கிரஸ்
இந்த சந்திப்பை காங்கிரஸ் விரும்பவில்லை. எனினும் 3 ஆவது அணிக்கு செல்லவில்லை என்று திமுக சார்பில் துரைமுருகன் மறைமுகமாக கூறியதன் பேரில் காங்கிரஸ் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது.
பிரமாண்ட மாநாடு
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி திமுக சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளது.
யாருக்கு அழைப்பு
இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேஜரிவாலை சந்தித்து...
இதற்காக ஒவ்வொரு தலைவராக சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவைலை திமுக எம்பி திருச்சி சிவா அவருடைய வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது திமுக சார்பில் அழைப்பிதழ் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட அவர் விழாவுக்கு வருவதாக தெரிவித்தார்.