ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக பாடுபடுவது திமுக தான்: ஸ்டாலின்
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
சீரோ மலபார் திருச்சபையின் முதன்மை பேராயர் கார்டினல் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமையில் நடந்த விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த விழா மூலம் அனைவருக்கும் முன் கூட்டியே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் பேசியபோது இந்த விழாவில் கலந்து கொள்ள சோனியா காந்தியிடம் அனுமதி வாங்கியதாகக் கூறினார்.
இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதியிடம் அனுமதி பெற நான் சென்றேன். என்னிடம் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டுமா? இதற்கு எல்லாம் அனுமதி கோருவது தவறு. உரிமையோடு சென்று வா என்று தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்காக திமுக ஆட்சியில் எத்தனையோ நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. சிறுபான்மை கிறிஸ்துவ பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், சத்துணவு, சீருடை ஆகியவை இன்றும் கிடைக்க காரணம் கலைஞர் தான்.
சிறுபான்மை மக்கள் சிறு-குறு தொழில் தொடங்க மானியத்துடன் நிதியுதவி, சிறுபான்மை மேம்பாட்டு கழகம், சிறுபான்மை முன்னேற்ற நலவாழ்வு இயக்கம் ஆகியவை திமுக ஆட்சியில் தான் சிறப்பாக செயல்பட்டன. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி சிறுபான்மை மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விழாவில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவ தமிழிசை பாடகி அருட்சகோதரி சாரா நவுரோஜி, எம்.சி.டி.எஸ். சமூக சேவை நிறுவன தலைவர் பேட்ரிக் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் விழாவில் 3 சக்கர நாற்காலிகள், பெண்களுக்கு தையல் எந்திரங்கள் என 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.