மாட்டிறைச்சி தடைக்கு எதிராக களமிறங்கிய திமுக.. சட்டசபையில் தனிநபர் தீர்மானம் தாக்கல்
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் சட்டசபையில் இன்று, தனிநபர் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: மாட்டிறைச்சியை மத்திய அரசு தடை செய்ததை எதிர்த்து சட்டசபையில் திமுக தனிநபர் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இறைச்சிக்காக மாடு, எருது, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட மிருகங்களை விற்கக் கூடாது என மத்திய அரசு கடந்த மாதம் சட்டம் இயற்றியது. இதற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், யூனியன் பிரதேசம் புதுவையிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக தமிழகத்தில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சூழலில் இன்று சட்டசபை கூடியுள்ளது.
முன்னதாக சட்டசபையில் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அண்ணா அறிவாயலத்தில் நேற்று முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தற்போது இன்று கூடவுள்ள சட்டசபையில் திமுக மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானத்தை கொண்டு வரும்என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி குரல் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்காது என்றே தெரிகிறது.
இது தவிர கூவத்தூர் பேரம் குறித்தும் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால் சட்டசபையில் சூடான விவாதங்கள் நடைபெறும் என்றும் தெரிகிறது.