எல்லா பிரச்சினைக்கும் காரணம் திமுக ஆட்சிதான்- எடப்பாடி பழனிச்சாமி
ஊதியத்தை உயர்த்தச் சொல்லி ஒரு பக்கம் போராடுகின்றனர். மற்றொரு பக்கம் பேருந்து கட்டணத்தை குறைக்கச் சொல்லி போராடுகின்றனர் எப்படி நிர்வாகம் செய்வது என்று கேட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
சென்னை: அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதற்காக திமுகவினர் போராட்டத்தை தூண்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஆகியோர் தலைமை செயலகத்தில் தொடக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டாக இருவரும் செய்தியாளர்கள் மத்தியில் பேசினர். அப்போது விதிப்படி உறுப்பினர் சேர்க்கை, புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எதிர்கட்சியினர் போராட்டம்
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்தை திமுகவினர்தான் தூண்டி விடுவதாக கூறினார்.
திமுக ஆட்சி கால நிலுவைத்தொகை
அரசு போக்குவரத்துக்கழகம் மிகப்பெரிய சேவை நிறுவனம். திமுக ஆட்சிக்காலத்தில்தான் கடன் வாங்கப்பட்டது. அதே போல போக்குவரத்து ஊழியர்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையும் திமுக ஆட்சி காலத்தில் தரவேண்டியதுதான். கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுவனம் நலிவடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
தூண்டி விடுவதா?
திமுக ஆட்சி காலத்தில் ரூ.43 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் 67 ரூபாயாக உயர்ந்துள்ளது. போக்கு வரத்து ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி தரக்கோரி போராடினர். அந்த போராட்டத்தை தூண்டியது திமுகதான். இப்போது கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராடுவதும் திமுகதான் என்று குற்றம் சாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நடப்பது என்னவென்று மனசாட்சிப்படி திமுகவிற்கு தெரியும்.
சிறந்த நிர்வாகம் இது
திமுக ஆட்சி காலத்தில் வைத்து விட்டு போன நிலுவைத் தொகையை அதிமுக ஆட்சி காலத்தில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது. புதிய பேருந்தின் விலை, உதிரி பாகங்கள் விலையும் அதிகரித்து விட்டது எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் முதல்வர் கூறினார். எது சிறந்த நிர்வாகம் என்று நீங்களே கூறுங்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.