முஸ்தபா முஸ்தபா.. திமுக மூழ்கி வரும் கப்பலப்பா.. பொன். ராதா கிண்டல்!
தமிழர்களை ஏமாற்றுவதற்காக திமுக பயன்படுத்திய வார்த்தைதான் மாநில சுயாட்சி. திமுக தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
சென்னை: தமிழர்களை ஏமாற்றுவதற்காக திமுக பயன்படுத்திய வார்த்தைதான் மாநில சுயாட்சி ஆகும். திமுக என்பது தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தமிழே படிக்காமல் பிஎச்டி வரை படிக்கும் நிலை உள்ளது. இடஒதுக்கீடு கோரி மருத்துவ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நல்லதல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுவது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறுவது போன்றுள்ளது.
தமிழர்களை முட்டாள்களாக்குவதற்கு திமுக பயன்படுத்திய வார்த்தைத்தான் மாநில சுயாட்சி. இதற்காக திமுக என்ன செய்தது. திமுக தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல். அதை காப்பாற்றுவதற்காக அவர்கள் முயற்சிக்கின்றனர். பாஜகவின் அசுர வளர்ச்சியை பார்க்க பொறுக்காமல் திமுகவும், அதிமுகவும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
தமிழை வளர்க்க திராவிடக் கட்சிகள் என்ன செய்துள்ளன. திருக்குறளை அகில இந்திய அளவில் பாடமாக கொண்டு வருவதற்கான அத்துனை முயற்சிகளையும் பாஜக செய்து வருகிறது.
மாணவர்களின் தரத்தை உயர்த்தவே நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கையை தான் மாணவர்கள் எதிர்க்க வேண்டும், நீட் தேர்வை அல்ல. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் திறமையாக வர முடியும். விவசாயிகள் பிரச்சினையை மாநில அரசு தான் தீர்க்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.