அதிமுக அரசின் ஊழல்களை முன் வைத்து வாக்கு கேட்பேன்.. ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் ஆனந்த்
திருச்சி: அதிமுக அரசின் ஊழல்களையும், முறைகேடுகளையும் முன்வைத்து மக்களைச் சத்தித்து வாக்கு கேட்பேன். வெற்றியும் பெறுவேன் என்று ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் தனது வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற என். ஆனந்த் மீண்டும் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசி பெற்ற ஆனந்த் திருச்சி புறப்பட்டு வந்தார். இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.
இன்று காலை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, தனது பிரச்சாரத்தை தொடங்கினார் ஆனந்த். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என்னை வேட்பாளராக அறிவித்த கட்சி மேலிடத்திற்கு நன்றி. இந்த இடைத் தேர்தலில், அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.
மக்கள் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனர். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பாலில் கலப்படம், மின்வெட்டு என பல மக்கள் விரோத கொள்கைகளால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே திமுக வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் ஆனந்த்.