சோ ராமசாமி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது… கருணாநிதி இரங்கல்
சோ ராமசாமி மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: உடல் நலமில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்த துக்ளக் பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவால் கடந்த மாதம் 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறப்பிற்கு திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தி:
தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக் கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ ராமசாமி அவர்கள் இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் .
பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக் கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.