இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன்... கருணாநிதி வாழ்த்துகள்
சென்னை: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு தி.மு. கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழர் தேசிய கூட்டமைப்பு; 16 உறுப்பினர்களைக் பெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இடம் வகித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முக்கியமான பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்த தேசிய அரசு அங்கே அமைக்க இரண்டு கட்சிகளுமே ஒப்புக் கொண்டன.
அதன் காரணமாக அங்கே இரண்டாவது பெரிய கட்சி, எதிர்க் கட்சியாக அங்கே அமரவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியான தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெற்று, இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
38 ஆண்டுகளுக்கு முன்பு 1977ஆம் ஆண்டு எனது அருமை நண்பர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கி யிருக்கும் வேளையில், எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு திமு கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகள்
Read: http://t.co/ma8edszoGg
— KalaignarKarunanidhi (@kalaignar89) September 5, 2015
சம்பந்தன் அவர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது.
சம்பந்தன் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.