கருணாநிதி திருமணத்தில் சிறப்புரையாற்றிய பால்ய நண்பர்.. என்எஸ் இளங்கோவன் காலமானார்
கருணாநிதியின் பால்ய நண்பர் என்எஸ் இளங்கோவன் தஞ்சாவூரில் காலமானார்.
தஞ்சை: கருணாநிதியின் பால்ய நண்பர் என்எஸ் இளங்கோவன் தஞ்சாவூரில் காலமானார். அவருக்கு வயது 95.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1923ம் ஆண்டு பிறந்தவர் என் எஸ் இளங்கோவன். செல்வ செழிப்புடைய குடும்பத்தில் பிறந்த இவர் அரசியல் மீது ஆர்வம் கொண்டு அண்ணாவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
அண்ணாவிற்கும் இளங்கோவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் அண்ணாவிடம் இருந்து ஈவிகே சம்பத் ஆரம்பித்த தமிழ்தேசிய கட்சியில் இணைந்துள்ளார். தனக்கு ஒரே எதிரி திமுக தான் என்று பேசும் மேடைகளில் எல்லாம் கூறிவந்துள்ளார்.
இதனிடையில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் தனிகட்சி ஆரம்பிக்கப்பட்ட போது ஆதரவளிப்பவர்களில் முதல் கையெழுத்திட்டது இளங்கோவன் தான். எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் இளங்கோவனுக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டது.
பின்னர் எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு ஜானகியம்மாளுடன் ஒருசில ஆண்டுகள் இருந்து விட்டு ஜெயலலிதா கட்சி பொருப்பேற்ற போது கட்சி பணிகளில் இருந்து விடுபட்டார் இளங்கோவன்.
என்எஸ் இளங்கோவன் திமுகவின் முதல் மாவட்ட செயலாளர் ஆவார். கருணாநிதியின் பால்ய நண்பர் மிகவும் நெருக்கமானவர் என்எஸ் இளங்கோவன்.
1948 ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞருக்கும் தயாளு அம்மாளுக்கும் திருமணம் நடைபெற்ற போது சிறப்புரை ஆற்றும் விருந்தினர்களில் அண்ணாவிற்கு அடுத்தபடியாக இளங்கோவன் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் இன்று காலமானார். கருணநிதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் என்எஸ் இளங்கோவனின் மறைவு அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.