ராம்குமாரின் தந்தையை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு... ஏன்?
சென்னை: ராம்குமாரின் தந்தை பரமசிவம், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ராம்குமாரின் மரணம் குறித்து பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க கருணாநிதி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தனது மகனின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக திமுக தலை கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, சீமான் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுமே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராம்குமாரின் தந்தை பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்பும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிட்டால் நீதி கிடைக்கும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், இந்த விஷயத்தில் நேரடியாக திமுக தலைவர் கருணாநிதி தலையிடும் போது ராம்குமாரின் மரணம் அரசியல் ஆக்கப்பட்டு உண்மை வெளிவராமல் போய்விடும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்பும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முடியாமல் போய்விட்டது. சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது அவரது குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.