ஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்... கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை : ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, பலியான தமிழர்களின் உடல்கள் மற்றும் பயணம் மேற்கோண்ட தமிழர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது...
24-9-2015, பக்ரீத் பண்டிகை நாளன்று, புனித யாத்திரை மேற்கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் சுமார் 700 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் என்ற செய்தியையும், 800 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
உலகமெங்கும் வாழ்கின்ற இஸ்லாமிய சகோதரர்கள், மெக்கா புனித பயணம் மேற்கொள்வதை தங்களின் முக்கிய வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதுபவர்கள்.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாகப் புனித யாத்திரை மேற்கொண்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதீன் முகமது இப்ராகிம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சியைச் சேர்ந்த ரெமிஜான் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலியானவர்களின் பட்டியலிலே இடம் பெற்றுள்ளார்கள்.
மெக்காவில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலியான அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலிருந்து சென்று மறைந்தவர்களின் உடல்கள் தாயகம் திரும்பவும், மற்றும் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் பாதுகாப்பாக வரவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.