அப்பாடா.. ஒரு வழியாக மு.க.ஸ்டாலின் "தலைவர்" பார்முக்கு வந்து விட்டார்!
தொண்டர்களை இனி கோபாலபுரத்தில் சந்திக்க உள்ளார் ஸ்டாலின்.
Recommended Video
சென்னை: அப்பாடா!! ஒருவழியா தலைவர் ஃபார்முக்கு வந்துவிட்டார் என திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்திக்கிறார்கள்.
திமுக என்ற பாரம்பரிய கட்சியை பொறுத்தவரை கோபாலபுரம் வீடுதான் முதன்மையானது, முக்கியமானது! இந்த இல்லத்தில் தான் மறைந்த கருணாநிதி பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளையும், பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடிய அறிவிப்புகளையும் எடுப்பது இயல்பான ஒன்றாக இருந்தது.
நெருக்கமான வீடு
வேறு எந்த முதலமைச்சரையும் சந்திக்க முடியாத அளவுக்கு கெடுபிடி எல்லாம் இந்த கோபாலபுரம் வீட்டில் கிடையாது. யார் வேண்டுமானாலும் கிளம்பி இங்கு வரலாம், யார் வேண்டுமானாலும் கருணாநிதியை சந்தித்து பேசலாம். அந்த அளவுக்கு கோபாலபுரம் தொண்டர்களுக்கு நெருக்கமான ஒரு வீடாகவே இருந்தது.
வெறுமையான கோபாலபுரம்
ஆனால் கருணாநிதி 2 வருடமாக படுத்த படுக்கையாகிவிட்டதால் தொண்டர்கள் சந்திப்பு குறைந்தது. தொடர்ந்து அவரது மறைவால் இந்த இடைவெளி நீண்டது. இந்த வீடும் பொலிவிழந்தது என்னவோ உண்மைதான். எந்நேரமும் தொண்டர்கள் கூட்டம் தெருவை ஆக்கிரமித்து கிடந்துவிட்டு, தற்போது சில காலமாக வெறுமையாகி போனதும் உண்மைதான்.
சந்தித்ததே கிடையாது
ஆனால் இந்த இடைவெளியை இன்னும் நீட்டிக்க கூடாது என ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டார் போலும். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி போலவே தொண்டர்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டார். ஸ்டாலின் கட்சிக்கும், அரசியலுக்கும் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும், அவர் இளைஞர் அணி தலைவராக இருந்தபோதிலிருந்து இப்போது வரை தொண்டர்களை சந்தித்ததே கிடையாது.
தயாளு அம்மாள்
ஆனால் தொண்டர்களை நோக்கி பயணம் மேற்கொள்வாரே தவிர, கோபாலபுரம் இல்லத்தில் அவர் யாரையும் சந்தித்து பேசியது கிடையாது. தற்போது தயாளு அம்மாள் இந்த வீட்டில் வசித்து வரும் நிலையில், தொண்டர்களை சந்திக்கவும், அவர்களின் குறை கேட்கவும், மனுக்களை பெற்றுக் கொள்ளவும் திமுக தலைவர் தயாராகி விட்டார்.
கருணாநிதி பாணி
நேற்றுகூட, ஆ.ராசா, கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் ஆகியோரை இந்த கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதேபோல, பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள் சிலரையும் கோபாலபுரம் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்து கூறினார். கருணாநிதியின் பாணியை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் குஷியை ஏற்படுத்தி உள்ளது.