தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல்
தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னை : அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்குள் ரூ.3,025 கோடி ஊழல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்று இருப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், நிலக்கரி ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
புதிய மின் திட்டங்கள் இல்லை
தமிழகத்தில் புதிய மின்திட்டங்களை நிறைவேற்றாமல், மின்தேவை என்ற காரணத்தைக் காட்டி, ரூ.12 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள 2.44 கோடி டன் அளவுக்கு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, இப்படியொரு மெகா முறைகேட்டை செய்துள்ளது அ.தி.மு.க. அரசு என்பது வெட்கக்கேடாக இருக்கிறது. இந்த முறைகேடு குறித்த விவரங்களை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகீர் தகவல்கள் அரசு கஜானாவை திட்டமிட்டு கொள்ளையடித்திருக்கும் அ.தி.மு.க. அரசின் உச்சக்கட்ட ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.
பொய்யான பதிவேடுகள்
மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில், "இந்தோனேஷியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டாலும் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் தீவுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரி விலையைவிட இந்த இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகம் இருக்கிறது. இந்தோனேஷியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யும்போது, அங்குள்ள நிறுவனங்கள் அசல் இன்வாய்சுடன் சேர்த்து 3 நகல்கள் கொடுப்பது வழக்கம். இந்திய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒரிஜினல் இன்வாய்ஸ் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த தரமற்ற நிலக்கரி இறக்குமதியில், ஒரிஜினல் இன்வாய்ஸ் கொடுப்பதற்கு பதிலாக அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகள் மட்டுமே சுங்கத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி, இறக்குமதி செய்துள்ள 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்வாரியம் நஷ்டம்
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரிக்கும் அந்த 40 இறக்குமதியாளர்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.12,250 கோடி மதிப்பிலான நிலக்கரியை, 5 பேரிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது என்பதும், அந்த இறக்குமதியில்தான் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதும் உற்று கவனிக்கத்தக்கது. இப்படிப்பட்ட ‘மெகா' முறைகேடு நடத்தி தரமற்ற நிலக்கரி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாறு காணாத நஷ்டத்தில் மூழ்கியது.
14 ஆயிரம் கோடி கட்டணம்
அதுமட்டுமின்றி, தமிழக மின்சார வாரியம் இருமுறை, ஏறக்குறைய ரூ.14 ஆயிரம் கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்கள், 2018-19-ம் நிதியாண்டில் 3-வது முறையாக 6 சதவீத மின்கட்டண உயர்வை மீண்டும் அனுபவித்தே ஆக வேண்டும் என்று வெளியாகியுள்ள பத்திரிகை செய்திகள் பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.
மக்களின் தலையில் ரூ.14 ஆயிரம் கோடி மின் கட்டணத்தைச் சுமத்தி, மின் வாரியத்தை நஷ்டத்தில் மூழ்க வைத்துள்ளது அ.தி.மு.க அரசு.
முதல்வர் உத்தரவிடவேண்டும்
ஆட்சியில், 2012-ம் ஆண்டு முதல் 31-3-2016 வரை இருந்த மின்வாரியத் தலைவர்களும், அமைச்சர்களும், முதல்-அமைச்சராக இருந்தவர்களும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆகவே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்காகக் காத்திராமல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.