தமிழகம் முழுக்க எழுச்சிப் பயணம்.. நவ.7ம் தேதி தொடங்குகிறார் ஸ்டாலின்
நவம்பர் ஏழாம் தேதி தொடங்குகிறது ஸ்டாலினின் முழுக்க எழுச்சிப்பயணம்.
சென்னை : நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக அரசுக்கு எதிராக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு முழுக்க எழுச்சிப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் ஏழாம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார் ஸ்டாலின்.
தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்தும், மாநில உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்த்தது குறித்தும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களிடம் எடுத்துரைக்கப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, நவம்பர் ஏழாம் தேதி சுற்றுப்பயணம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் சமயத்தில் 'நமக்கு நாமே' பயணம் நல்ல மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்தப் பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் பயணத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே மத்திய அரசோடு மோதல் போக்கைக் கடைபிடித்து வருபவர் மம்தா. இதனால் மத்திய அரசிலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 மண்டலங்களாகப் பிரித்து பயணம் மேற்கொள்ள திட்டம் தயாராகி வருகிறது.