சேகர் ரெட்டி வழக்கில் ஆர்பிஐ அந்தர் பல்டி கறுப்புப் பண ஒழிப்பின் தோல்வியே- ஸ்டாலின் பொளேர்
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை என ஆர்பிஐ கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
சென்னை : குட்கா ஊழல் விசாரணை வேண்டுமென்றே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்டாலின் கூறியதாவது:
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களைக் குறித்து வைக்காததால், அது எந்த வங்கியின் பணம் என்று சி.பி.ஐ.,க்குத் தெரிவிக்க முடியவில்லை என்று வழக்கு விசாரணையில் ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான அச்சகங்களில் அச்சிடப்பட்ட பணம் பற்றி நாட்டின் தேசிய வங்கியான ரிசர் வங்கிக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்? மூன்று மாதங்களில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யவேண்டிய வழக்கில், ரிசர்வ் வங்கியின் முறையற்ற பதில்களால் வேண்டுமென்றே வழக்குத் தாமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கை ரத்து செய்ய சேகர் ரெட்டி நீதிமன்றத்தில் கோரி உள்ளார். அரசியல் நோக்கத்திற்காக சேகர் ரெட்டியைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி துணை போகிறதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையே கறுப்புப் பண ஒழிப்பில் மோடி அரசின் தோல்வியைக் காட்டுகிறது.
சேகர் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடைய அமைச்சர்களின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ஏன் எந்த மேல் நடவடிக்கையும் இல்லை . குட்கா ஊழல் விசாரணையையும் காரணம் இல்லாமல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.