வாழையடி வாழை.. திமுகவில் உதயநிதியின் வருகை ஆச்சரியம் இல்லை.. ஸ்டாலின்
திமுகவில் உதயநிதி இருப்பது ஆச்சயம் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நான் திமுகவில் இருப்பதால் என் மகனும் திமுவில் இருக்கிறார், இதில் ஆச்சயரிப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
வாரிசு அரசியல் என்பது நீண்டகாலமாகவே விவாதத்திற்குரிய ஒன்றாகவும், சர்ச்சைக்குரிய ஒன்றாகவுமே நம் நாட்டில் நிலவி வருகிறது. இது நேரு காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆனால் தமிழகத்திலேயே அதிக அளவு வாரிசுகள் அரசியலில் காலடி வைத்தது மறைந்த தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்துதான்.
ஸ்டாலினுக்கு முக்கியத்துவம்
இதனால் ஸ்டாலினின் ஆரம்ப கால அரசியல் பயணத்தின்போதே விமர்சனங்கள் வந்துவிழ ஆரம்பித்தன. ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக காரணம் காட்டியே நிறைய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டார்கள். அதில் ஒருவர் அன்றைய கருணாநிதியை எதிர்த்து கொண்டு, தனிக்கட்சியே ஆரம்பித்துவிட்டார்.
ஸ்டாலின் முற்றுப்புள்ளி
இப்போதுகூட ஸ்டாலின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு சிலர் வாரிசு காரணமாகத்தான் இந்த பொறுப்பு கிடைத்தது என்றும் சொல்லி வருகிறார்கள். இதில் உதயநிதி ஸ்டாலினின் வருகையும் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போதும் இதே வாரிசு அரசியல் சர்ச்சைதான் ஏற்பட்டது. ஆனால் இத்தகைய சர்ச்சை பேச்சு, எதிர்மறை கருத்துக்களுக்கு எல்லாம் ஸ்டாலின் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்து நாளிதழுக்கு பேட்டி
தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை, வாரிசு அரசியல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்கள்தான் இவை:
பல லட்ச குடும்பங்கள்
"உதயநிதி, இப்போது அரசியலில் இறங்கவில்லை, அரசியலில்தான் எப்போதும் இருக்கிறார். எனவே இது மிகவும் பழைய கேள்வி. கட்சியில் ஒருவர் இருக்கிறார் என்றால், அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருக்கிறார்கள் என்று தான் பொருள். குடும்பம், குடும்பமாக பல இலட்சம் குடும்பங்கள் இணைந்திருப்பதுதான் தி.மு.கழகம்.
வாழையடி வாழை
தாத்தா, தந்தை, மகன், கொள்ளுப் பேரன் என்று மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையாக, பல்லாயிரம் குடும்பங்கள் கட்சியில் இருப்பதை நீங்கள் ஊன்றி, விரிவாக விசாரித்துப் பார்த்தால், விளங்கிக் கொள்ள முடியும். வாழையடி வாழையாக வாராது வந்திருக்கும் மாமணிதான் தி.மு.க. என்பதையும், இது பாரம்பரியமான திராவிட இயக்கம் என்பதையும், தமிழ் மக்கள் அறிவார்கள். எனவே தந்தையும் மகனும் இயக்கத்திற்காகப் பாடுபடுகிறவர்கள் என்பது ஒன்றும் ஆச்சரியம் தரத்தக்க செய்தியோ, வழக்கத்திற்கு மாறான ஒன்றோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு ஸ்டாலின் அந்த நாளிதழுக்கு பதிலளித்துள்ளார்.