நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் மரணம் : ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மரணம் அடைந்தார். சென்னையில் அவரது இல்லத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை இல்லத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனுக்கு வயது 89. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலையில் மரணம் அடைந்தார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் மறைவு திமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார். தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஸ்டாலின் கூறினார்.
வழக்கறிஞராக பணியை தொடங்கிய ரத்தினவேல் பாண்டியன், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். சில ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். அம்பாசமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் ஜோஷப் கல்லூரியில், பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
1954ம் ஆண்டு மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து முடித்தார். இதையடுத்து, ஸ்ரீ.கே.நாராயணசாமி முதலியார் தலைமையில் கீழ் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய ரத்தினவேல் பாண்டியன், 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
1974ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பிறகு, 1988ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், 1988ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். இதையடுத்து, 1988ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்றார். தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்த ரத்தினவேல் பாண்டியன், 1994ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்றார்
நீதிபதியாக பல்வேறு முக்கிய தீர்ப்புகளை ரத்தினவேல் பாண்டியன் வழங்கியிருக்கிறார். தேசிய பிற்பட்டோர் ஆணைய தலைவராகவும், தென் மாவட்ட கலவர தடுப்பு பரிந்துரை ஆணைய தலைவராகவும் இவரது பணி பெரிதும் பாராட்டப்பட்டது.
ஆரம்பகாலங்களில் திராவிட இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். திமுக.வின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்து, அந்தப் பகுதியில் கட்சியை வளர்த்தவர் இவர். பின்னர் அரசியலில் இருந்து விலகி பிரபலமான வழக்கறிஞராக திகழ்ந்தார். நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனின் ஜூனியர் வழக்கறிஞர்தான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.