சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் மரணம்.. ‘மக்கள் மேயர்’ என ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் சென்னை மேயர் சா.கணேசன் மரணத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் தி.நகர் சட்டமன்ற உறுப்பினருமான திமுகவைச் சேர்ந்த சா.கணேஷன் நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சா.கணேசன். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் காலமானார். இவருக்கு வயது 89. பொதுமக்கள் அஞ்சலிக்காக வளசரவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடல், இன்று மாலை மின்மயானத்தில் தகனம் செய்யடவுள்ளது.
ஆரம்பகால திமுக தொண்டரான சா.கணேசன் அண்ணா, கருணாநிதியோடு நெருங்கிப் பழகியவர். திமுக தலைமை அலுவலக செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
பக்கிங்ஹாம் கர்நாட்டின் மில்லின் விற்பனையாளராக பணிபுரிந்த காலத்தி, 1959,1964,1968 ஆண்டுகளில் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சென்னையின் மேயராகவும், தி.நகர் சட்டசபை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மக்களின் குறைகளை நேரில் அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைத்து 'மக்கள் மேயர்' எனப் பெயர் பெற்றவர் சா.கணேசன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.