களையெடுக்கப்படும் தி.மு.க மா.செக்கள்! - ஆர்.கே.நகர் கொதிப்பு அடங்காத ஸ்டாலின்
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட்டைப் பறிகொடுத்த கொதிப்பில் இருக்கிறது தி.மு.க தலைமை. ' வட்டத்தைக் கலைத்து நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது முதல்கட்டம்தான். இதற்குக் காரணமான மாவட்ட செயலாளர்கள் களையெடுக்கப்பட உள்ளனர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.
தினகரனின் வெற்றியும் அதைத் தொடர்ந்து அ.தி.மு.கவுக்குள் நடக்கும் கலவர சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். தேர்தல் தோல்வி அளித்த பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், அதனை மு.க.அழகிரி விமர்சித்த விதம் நிர்வாகிகளை கொதிப்பில் ஆழ்த்திவிட்டது.
ஆனால், அழகிரியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதையே ஸ்டாலின் விரும்பவில்லை.
அழகிரிக்கு பதில் இல்லை
' இந்த செயல் தலைவர் இருக்கும் வரையில் இப்படித்தான் இருக்கும்' என அழகிரி கொதிப்பைக் காட்ட, ' கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின். இதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆராய தி.மு.க கொறடா சக்ரபாணி, வழக்கறிஞர்கள் கண்ணதாசன், கிரி ராஜன் ஆகியோர் தலைமையில் குழு அமைத்தார் ஸ்டாலின்.
குழு ஆய்வு
இந்தக் குழுவினர் இரவு பகலாக தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தனர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், தேர்தல் பணியாற்றத் தவறிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 14 வட்டக் கழகங்கள் கூண்டோடு கலைப்படுவதாகவும் 120க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்படுவதாகவும் அறிவித்தது தி.மு.க தலைமை.
அடக்கி வாசித்த ஆர்.கே.நகர் புள்ளி
ஆர்.கே.நகர் தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். " செயல் தலைவரின் இந்த அதிரடி நடவடிக்கையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இவர்கள் மட்டும்தான் தோல்விக்குக் காரணமா எனவும் தலைமை ஆராய்ந்து வருகிறது. 15 மண்டலங்களிலும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் பாகம் வாரியாக வாக்காளர்கள் ஒதுக்கப்பட்டனர். அப்படிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் சில ஆயிரம் வாக்காளர்கள்தான் கணக்கில் வருவார்கள். இவர்களிடம் வாக்கு சேகரிப்பது என்பது எளிதானது. சொந்தப் பணத்தை செலவு செய்திருந்தால்கூட, ஒவ்வொரு பாகத்துக்கும் ஐந்து லட்ச ரூபாய் வரையில்தான் செலவாகியிருக்கும். ஆனால், இவர்கள் யாரும் கைக்காசை செலவிடவில்லை. வடசென்னையைப் பொறுத்தவரையில், அந்த புள்ளி வைத்ததுதான் சட்டம். அவருக்கும் அ.தி.மு.க வேட்பாளருக்கும் என்ன உறவு என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
முன்பே எச்சரித்த நிர்வாகிகள்
களப்பணியில் விளையாடும் அந்தப் புள்ளியும் தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டவில்லை. முன்பொருமுறை அந்தப் புள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு போனபோது, ' அ.தி.மு.கவுக்கும் அவன்தான் மாவட்ட செயலாளர்' என ஒரே வரியில் முடித்துக் கொண்டார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாட்களில் தலைமையில் உள்ளவர்களும் ஆர்வம் செலுத்தவில்லை. ' அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை தினகரன் பிரிப்பார். நாம் எளிதாக வெற்றி பெறுவோம்' எனக் கணக்கு போட்டனர். ' இது தவறான முடிவு; தினகரனின் பிரசார பாணி இதுவரையில் நாம் பார்க்காதது' என கீழ்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்குப் பதில் கொடுத்த தலைமைக் கழக நிர்வாகிகள், ' இந்தத் தேர்தலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுத்தேர்தலுக்குப் பணத்தைச் செலவு செய்வோம்' என உறுதியாக இருந்துவிட்டனர். இப்போது பேசி என்ன பயன்?" என்றார் கொதிப்போடு.
களையெடுக்கப்படும் மா.செக்கள்
" கீழ்மட்ட நிர்வாகிகள் நீக்கத்துக்குப் பிறகு மாவட்ட செயலாளர்களின் தேர்தல் பணிகளை ஆராய்ந்து வருகிறார் ஸ்டாலின். இவர்களின் வார்டு வாரியாக பணி செய்யாத மாவட்ட செயலாளர்களைப் பட்டியல் எடுத்திருக்கிறார். இதில் மிகவும் மோசமாக தேர்தல் வேலை பார்த்த மூன்று முக்கிய மாவட்ட செயலாளர்களைக் கட்சியில் இருந்து நீக்க இருக்கிறார். இப்படிச் செய்தால்தான் அடுத்து வரும் தேர்தலில் மற்ற மாவட்ட செயலாளர்கள் உறுதியாக வேலை பார்ப்பார்கள் என நம்புகிறார். இன்னும் சில நாட்களில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் இருக்கும்" என்கிறார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்.