கடந்த முறை பெற்றதைக் கூட இந்த முறை பெறவில்லையே திமுக?
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதும், திமுக தோல்வி அடைந்ததும் பெரிய ஆச்சரியமான செய்தி இல்லைதான். ஆனால் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் கூட திமுகவால் இந்த முறை பெற முடியாமல் போனது ஆச்சரியம்தான்.
ஸ்ரீரங்கம் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தீவிர அக்கறை காட்டி வந்தார். மிகவும் சீரியஸாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். தான் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் எல்லாம், கடந்த முறை வாங்கியதையாவது வாங்கி விடுவோம்ல என்றும் கேட்டு வந்தார். தோற்றாலும் பரவாயில்லை, கடந்த முறை வாங்கியதை விட குறைவாக வாங்கி விடக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
காரணம், அரசு எந்திரத்தை அதிமுக முழுமையாக பயன்படுத்தும், பண பலத்தை பிரயோகிக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். எனவே அதை மீறி வெல்வது என்பது சிரமமானது. அதற்குப் பதில் கடந்த முறை வாங்கிய வாக்குகளையாவது தக்க வைத்துக் கொண்டால் கவுரமாக இருக்கும், கட்சியின் பெயரும் கெடாது என்பது திமுக தரப்பின் எண்ணமாகும்.
அதற்கேற்ப திமுகவினரும் கடுமையாக உழைக்கத்தான் செய்தார்கள். சும்மா சொல்லக் கூடாது, அதிமுகவினருக்கு இணையாக கடுமையாக பிரசாரத்திலும், பிற பணிகளும் திமுகவினரும் ஈடுபடத்தான் செய்தார்கள். ஆனால் என்ன புண்ணியம், வெற்றியும் கிடைக்கவில்லை, கடந்த முறை வாங்கியதையும் கூட திரும்பப் பெற முடியாமல் போய் விட்டது.
திமுக வேட்பாளர் ஆனந்த் இடைத் தேர்தலில் 55,045 வாக்குகள் பெற்றார். ஆனால் இதே ஆனந்த் கடந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு
63,480 வாக்குகள் பெற்றவர் ஆவார். கடந்த முறையை விட இந்த முறை அவருக்கு கிட்டத்தட்ட 8500 ஓட்டுக்கள் குறைந்து விட்டன. இது திமுகவுக்கு சற்று கவலைக்குரிய விஷயம்தான்.
பரவாயில்லை, டெபாசிட்டாவது கிடைத்ததே என்ற ஆறுதல் வேண்டுமானால் திமுக பட்டுக் கொள்ளலாம்.