திமுக பிரமுகர் ஒத்துழைப்பில் கரகாட்டக்காரி மோகனா செம்மரம் கடத்தல்
சென்னை: செம்மரக்கடத்தலில் கரகாட்டக்காரி மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் மோகனா செம்மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த கரகாட்டக்காரி மோகனாம்பாளின் காட்பாடி வீட்டில் ரூ. 4 கோடி பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
உறவினர்கள் கைது
மோகனாம்பாளின் உறவினரும் சரவணனின் மனைவியுமான தேவிபாலா, மோகனாம்பாளின் அக்கா நிர்மலாவின் மூத்த மகன் பழனி (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திமுக பிரமுகர் கைது
மேலும் மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து கத்தி, வெட்டுக்கத்தி, கோடாரி, வீச்சரிவாள் உட்பட பல்வேறு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவருக்கு கூட்டாளியாக செயல்பட்ட முக்கிய புள்ளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசியல் பிரமுகர் உதவியோடு
கைது செய்யப்பட்ட பாபுவுக்கும் மோகனாம்பாளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்டி ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வந்துள்ளனர். இதற்கு இடைத்தரகராக சரவணன் முதலில் செயல்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அவரே சில இடங்களில் செம்மர கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் உதவி
சில மாதங்களுக்கு முன்பு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவருக்கும், மாவட்ட பொறுப்பில் உள்ள மற்றொரு அரசியல் கட்சி பிரமுகருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருந்துள்ளது.
போலீசாருடன் தொடர்பு
இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளில் மோகனாம்பாளுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாக பலகோடி மதிப்பிலான செம்மரங்களை மோகனாம்பாள், சரவணன் கூட்டாக கடத்தியுள்ளனர்.
சிக்காத மோகனா
வேலூர் மாவட்ட எல்லை பகுதியில் ஆந்திர எல்லையோரம் 13 சோதனை சாவடிகள் உள்ளன. இதேபோல் ஆந்திர மாநில சோதனை சாவடிகளும் அமைக்கபட்டுள்ளன.
இந்த சோதனை சாவடிகளில் மோகனாம்பாள் கொண்டு வந்த செம்மரங்கள் பிடிபட்டதே கிடையாது என்கின்றனர். அந்த அளவுக்கு 2 மாநில சோதனை சாவடிகளுக்கும் மோகனாம்பாள் ஆட்டம் காட்டியுள்ளார்.
காய்கறி, மருந்து லாரி
வாழைக்காய் லாரி, மருந்து பொருட்கள் கொண்டு வருவது போல பல்வேறு நூதன முறைகளில் செம்மரங்களை வெட்டி கடத்தப்பட்டுள்ளன. மேலும் வேலூர், சித்தூர் பகுதியில் உள்ள சில அரசியல் பிரமுகர்கள் உதவியுடன் செம்மரங்கள் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சோதனைச்சாவடிகளில்
2 மாநில சோதனை சாவடிகளில் மோகனாம்பாளுக்கு உதவியாக இருந்தவர்கள் யார் என்பது விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம், ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தலில் கொடிகட்டி பறந்த மோகனாம்பாளை பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சென்னையில் பதுங்கல்
கடந்த 25-ந்தேதி மோகனாம்பாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூட்டுவலிக்கு ஆபரேசன் செய்துள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெறவும் முயற்சி செய்தார்.
இதனால் அவர் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனிப்படை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.