வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ6 லட்சம், தனியார் துறையில் இடஒதுக்கீடு- திமுக தேர்தல் அறிக்கை
சென்னை: வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஆண்களுக்கு ரூ 6 லட்சமாகவும் பெண்களுக்கு ரூ 7.2 லட்சமாகவும் அதிகரிக்க வலியுறுத்துவோம். தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இடஒதுகீட்டுக்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஆண்களுக்கு ரூ. 6 லட்சமாகவும், பெண்களுக்கு ரூ. 7.2 லட்சமாகவும் அதிகரிக்க வலியுறுத்தப்படும். தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுக்கு பாடுபடுவோம். மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க வகை செய்வோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம்.
திருநங்கைகளை 3-ம் பாலினமாக அங்கீகரிக்க நடவடிக்கை மேற்கொள்வோம். இடஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதை மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.
பச்சை தேயிலைக்கு ஆதார விலை அறிவிக்கப்படும். கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி முறையில் அமல்படுத்தவேண்டும். குளச்சல் துறைமுகம் தரம் உயர்த்தப்படும்.
மதநல்லிணக்க வரலாறு படைப்போம்- மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம். மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்படும். உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஏற்க வலியுறுத்துவோம்.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்த தொடர் முயற்சி எடுக்கப்படும். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இணை ஆட்சிமொழியாக வலியுறுத்தப்படும்
இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.