சட்டசபை தாக்குதல், நம்பிக்கை வாக்கெடுப்பு... பிரணாப் முகர்ஜியிடம் நேரில் முறையிட திமுக முடிவு
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடந்த தாக்குதல், நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்கிறது திமுக.
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க திமுக முடிவு செய்துள்ளது.
இதற்காக திமுக எம்.பிக்கள், குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்கக் கோரி அணுகியுள்ளனராம்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோரியிருந்தது. சனிக்கிழமை இதற்காக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த திமுக, காங்கிரஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் தனபால் அதை ஏற்கவில்லை. விடாப்பிடியாக மறுத்து வந்தார்.
மேலும் திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர். அப்போது பல திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக மு.க.ஸ்டாலினும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவைக் காவலர்களுடன் போலீஸ் அதிகாரிகளும் மார்ஷல் உடையில் புகுந்திருந்ததும் பின்னர் அம்பலமானது.
இதையடுத்து எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர். மேலும் 2 முறை தீர்மானத்தை முன்மொழிந்தால் முதல்வர். இது சட்டவிரோதமானது. திமுக எம்.எல்க்களைத் தாக்கியுள்ளனர். கூவத்தூரிலிருந்து அடைத்து வைத்திருந்த எம்.எல்.ஏக்களை கூட்டி வந்து மிரட்டி வாக்களிக்க வைத்துள்ளனர். எனவே இந்த வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஆளுநரைச் சந்தித்தது திமுக. ஆனால் ஆளுநர் கைவிரித்து விட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது திமுக. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவரிடமும் நேரடியாக முறையிட திமுக முடிவு செய்துள்ளது. திமுக எம்.பிக்கள் குழுவாக சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர். இதற்காக நேரம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.