எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு... நாளை ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் - ஸ்டாலின்
தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக நாளை குடியரசுத்தலைவரை சந்தித்து முறையிடப் போவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் அரசியல் செய்வதால் பெரும்பான்மை இழந்து விட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடவடிக்கை கோரி நாளை காலை 11 மணிக்கு டெல்லி சென்று குடியரசுத்தலைவரை சந்திக்க உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவில் அணிகள் ஒன்றிணைந்த பிறகு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஏற்கனவே இதுகுறித்து ஸ்டாலின், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் கடந்த 27 ஆம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் ஆளுநரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில் இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்துப் பேசினார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த பிரச்னையில் தலையிட முடியாது, சட்டம் அதற்கு இடம் தரவில்லை என்று கூறியுள்ளார். 19 சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுகவினர் என்றுதான் இப்போதைய நிலையில் இருக்கிறது. அந்த 19 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது வேறு கட்சிக்குச் சென்றாலோ அது சட்டச் சிக்கலாகும். அவர்களுக்குள் இரு பிரிவாக இருக்கிறார்கள், அதில் நான் தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் நன்றாக அரசியல் செய்கிறார். எனவே நாங்கள் குடியரசுத்தலைவரை சந்தித்து முறையிடப் போகிறோம். நாளை காலை 11 மணிக்கு நேரம் கிடைத்திருக்கிறது. நாங்கள் குடியரசுத்தலைவரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இப்போது தலையிட முடியாது என்று கூறும் ஆளுநர் அப்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என தனி தனியாக பிரிந்து இருக்கும் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது ஏன்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் கைகளை சேர்த்து வைத்து மீன் கடை வியாபாரம் செய்வது போல நடந்து கொண்டார் பொறுப்பு ஆளுநர். இது ஆளுநருக்கு அழகல்ல என்று கூறினார்.
குடியரசுத்தலைவரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியாக இந்த பிரச்சினையை நாங்கள் அணுகுவோம் என்று ஸ்டாலின் கூறினார்.