சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: திருச்சியில் திமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் தடை
திருச்சியில் எதிர்கட்சியினர் நடத்த இருந்த அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாநாகர காவல்துறை தடை விதித்துள்ளது.
திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எதிர்கட்சியினருக்கு திருச்சி மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவ கனவு சிதைந்து போனதால் கடந்த 1ஆம்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து இடங்களிலும் போராட்டமும் வெடித்துள்ளது.
குழுமூர் வந்த மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறினார். அதன்படி நடந்த கூட்டத்தில் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 8ஆம்தேதி அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் இன்று மாலை 5 மணி அளவில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருமாவளவன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நீட் தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டம், கடையடைப்பு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து திமுக பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அனைத்துக்கட்சி கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று திருச்சி மாநகர காவல்துறை கூறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசியில் அழைத்து கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறியதை அடுத்து அனைத்து ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திருச்சியில் குவிந்துள்ள நிலையில் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.