திமுக பொதுக்கூட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகாது: திருமாவளவன்
திருச்சி: பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்களுக்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
திருச்சிக்கு வந்திருந்த திருமாவளவன் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், திமுக பொதுக்கூட்டம் ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது. எனவே அதை தமிழக அரசு தடை செய்திருப்பது யதேச்சையதிகார போக்கு. திமுகவின் பொதுக்கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்போவதில்லை, இடையூறு ஏற்படும் போராட்டங்களுக்குத்தான் தடை விதித்திருந்தது உச்சநீதிமன்றம்.
லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடிவிட்ட நிலையில், பொதுக்கூட்டத்தை ரத்து செய்வது சரியில்லை. இருப்பினும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து ஒரு முடிவை அறிவிப்போம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.