கூட்டத் தொடர் முழுவதும் சட்டசபையில் இருந்து திமுகவினர் சஸ்பெண்ட்: சபாநாயகர் நடவடிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இந்தக்கூட்டத்தொடர் முழுவதும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சட்டப்பேரவை கூடியதும், வறட்சி தொடர்பாக விவசாயிகள் எழுப்பியுள்ள புகார் பற்றி தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க , தே.மு.தி.க, இடதுசாரிகள், புதிய தமிழகம், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை சார்பில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது, நெல், வாழை, தென்னை விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், தே.மு.தி.க, புதிய தமிழகம், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி சார்பில் பேசிய உறுப்பினர்கள் அனைவரும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அமைச்சர் உதயகுமார்
தமிழக சட்டப்பேரவையில் விவசாய மானியக்கோரிக்கை மீது பேசிய அமைச்சர் உதயகுமார், சுனாமி நிவாரண திட்டத்தை தி.மு.க ஆட்சியில் முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். சுனாமி தாக்கியபோது முதல்வர் ஜெயலலிதா உடனடியாக களத்தில் இறங்கினார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க செல்லவில்லை என்று தெரிவித்தார்.
திமுகவினர் தர்ணா
திமுக குறித்து தமிழக அமைச்சர் உதயகுமார் சட்டப்பேரவையில் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தியும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு சென்று முழக்கமிட்டனர்.
திமுகவினர் வெளியேற்றம்
இதனால் அவையில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தவறான தகவல்
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வறட்சி தொடர்பான பதிலுரையில் அமைச்சர் உதயகுமார் தவறான தகவல்களை அளிக்கிறார் என்று கூறினார்.
சர்வாதிகார சபாநாயகர்
மேலும், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சபாநாயகர் செயல்படுகிறார் என்றும், சபாநாயகர் சர்வாதிகாரிபோல செயல்படுகிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மமக, புதியதமிழகம்
இதனிடையே, வறட்சி தொடர்பாக அமைச்சர் உதயகுமார் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிக வெளிநடப்பு
தேமுதிகவினர் போராட்டம் நடத்துவதாக நாடகம் போடுவதாக அமைச்சர் மோகன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் அவையை விட்டு வெளியேறினர்.
3வதுமுறையாக வெளியேற்றம்
இந்த கூட்டத் தொடரில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் 3வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அமைச்சர் வைத்தியலிங்கத்தின் கருத்தால் அமளி ஏற்பட்டதை அடுத்து கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அமளியும் வெளியேற்றமும்
அதேபோல திமுகவைப் பற்றி விமர்சித்த மயிலாப்பூர் எம்.எல்.ஏவின் பேச்சினை கண்டித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இன்றைய தினம் தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
இதனிடையே தமிழக சட்டப்பேரவையின் இந்த கூட்டத்தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். அவைக்கு உந்தம் விளைவிக்கும் நடவடிக்கையில் தி.மு.க.வினர் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.
சபாநாயகருக்கு அதிகாரம்
கூட்டத் தொடரில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் 3வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, கூட்டத் தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.